வருமான வரி விதிகளில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்!

income tax

New tax rules: வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது.

2024-25 புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்திய வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரி திட்டமிடலை எளிதாகுவதற்கும், வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளை அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புதிய வரி முறை (New Tax Regime) இயல்பான தேர்வாக (default option) அமல்படுத்தப்படும். அதன்படி இந்த புதிய வரி முறையில் (tax slabs), ரூ.3,00,000 வரை 0% வரி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் விதிக்கப்படும்.

மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும். புதிய வரி முறை இயல்பான தேர்வாக இருக்கும் என்றாலும், வரி செலுத்துபவர்கள் பழைய முறையைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு பழைய வரி முறையில் மட்டுமே வழங்கப்பட்ட ரூ.50,000 என்ற நிலையான விலக்கு தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். இதனால், புதிய வரி முறையில் வரி செலுத்துபவர்களின் வரிக்குட்பட்ட வருமானம் கூடுதலாக குறையும். அதேசமயம், ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிய வரி முறையில் ரூ.5 லட்சமாக இருந்த வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதாவது, ஒரு தனிநபர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்