உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக.. ராஜஸ்தான் சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான ஏற்பட்ட மோதல்  காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். பின்னர், சபாநாயகர் நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது  செவ்வாய்க்கிழமை(நேற்று) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் 18 பிற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று  மீண்டும் வந்தது. அப்போது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என  ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஜூலை 24-ஆம் தேதி வரை சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.