வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்!

A nationwide Bharat Bandh has been declared today as farmers are set to stage a protest today against the agrarian laws.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால், நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தும், முழுமையாக வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயக்கப்படும் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டதிற்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.