அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Featured image

டெல்லி :பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த கடிதம், 1968 ஆம் ஆண்டு குடிமைப் பாதுகாப்பு விதிகளின் பிரிவு 11 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. இது மக்களையும் சொத்துக்களையும் தீங்கு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்க அவசர காலங்களில் விரைவான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த அதிகாரம் போர் போன்ற நெருக்கடியான காலங்களில், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படுவதையும் இது உறுதி செய்கிறது. இந்த அவசர நடவடிக்கைகளுக்கு நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.