தாக்கப்பட்ட கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு.!

- டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழக சங்க தலைவர் ஆயிஷா கோஷ் உட்பட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஜனவரி 4 -ம் தேதி பல்கலைக்கழக சர்வர் அறையை சேதப்படுத்தியதாக கூறி ஆயிஷா கோஷ் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களால் கண்ணில் பட்ட அனைத்து பொருள்களையும் மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் தாக்கினர்.
இந்த தாக்குதலில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷா கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்து அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆயிஷா கோஷ் ,இந்த கொடூர தாக்குதலுக்கு பாஜக மாணவரணியான (ஏ.பி.வி.பி.) காரணம் என குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் உள்ளனர்.
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 4 -ம் தேதி பல்கலைக்கழக சர்வர் அறையை சேதப்படுத்தியதாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்த இருந்த நிலையில் , மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.