“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ChandrababuNaidu

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 5) தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும், தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.

தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது என்றால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது” என பேசியிருந்தார்.

இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார். அதாவது, தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு அனைவரிடமும் உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தோடு, ‘மக்கள் தொகை மேலாண்மைக்கும் தொகுதி மறு சீராண்மைக்கும் சம்பந்தம் இல்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மக்களவை தொகுதி மறுவரையறை என்பது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் செயல்முறை. எனவே, அதுவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதும் வேறு.. வேறு.. என்பது புரிந்து கொள்ளவேண்டும். தொகுதி மறு சீரமைப்பு என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான ஒரு விஷயம்.

இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். எனவே, இது நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேசத்தின் நலன் கருதி இதை சொல்கிறேன். தொகுதி மறுவரையறை குறித்து மசோதா எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனால் இப்போது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் பல நாடுகள் மனித வளங்களை நிர்வகிப்பதில் தோல்வியடைந்துள்ளன என்று சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டினார். இதனால், குடும்பக் கட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை மாற்றிக்கொண்டதாகவும், மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை இப்போது உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.

இந்திய மக்கள்தொகை பற்றிப் பேசுகையில், தென்னிந்தியாவில் வயதான பிரச்சனை தொடங்கிவிட்டது. மத்திய அரசு அல்லது நிதி ஆணையம் மக்கள்தொகையை ஊக்குவிக்க வேண்டும். இன்று வயதான பிரச்சனைகள் உள்ளவர்களை தண்டிக்காதீர்கள். அதிக குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை கொடுங்கள் என்று வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு கூறி வரும் நிலையில், அதனை மறைமுகமாக சாடியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பாக பேசிய அவர்,” என் மாநிலத்தில் மூன்று மொழியல்ல 10 மொழி கூட படிக்க வேண்டும் என கூறுவேன். அப்படி நன்றாக அணைத்து மொழியிலும் படித்தால் தான் வேலை கிடைக்கும். தாய் மொழி அறிவை வளர்க்க உதவும் மற்ற மொழி பணிபுரிய உதவும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்