டெல்லி :ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய பயன்படுத்தும் சார்ஜிங் பாயிண்டுகளில் எலக்ட்ரிக் கெட்டி (வாட்டர் கெட்டில்), ஹீட்டர், இம்மர்ஷன் ராடு போன்ற அதிக மின்சாரம் உறிஞ்சும் சாதனங்களை இணைத்துப் பயன்படுத்தக் கூடாது என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதால் ரயிலின் மின் வயரிங் சிஸ்டத்தில் திடீர் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து, குறுகலவு (short circuit) போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் உள்ள சார்ஜிங் சாக்கெட்டுகள் 110 வோல்ட் மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வாட்டர் கெட்டி, ஹீட்டர் போன்றவை 1000 வாட் முதல் 2000 வாட் வரை மின்சாரம் உறிஞ்சுவதால், மின் அழுத்தம் தாங்க முடியாமல் வயரிங் சூடாகி தீப்பற்றும் அபாயம் உள்ளது. கடந்த சில மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து RPF தீவிர சோதனை நடத்தி வருகிறது.
பல ரயில்களில் பயணிகள் கெட்டி பயன்படுத்தியதால் புகை வந்ததாகவும், சில இடங்களில் தீப்பொறி ஏற்பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன.இதனால், ரயிலில் இதுபோன்ற அதிக மின்சார சாதனங்களைப் பயன்படுத்தினால் உடனடியாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இது ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 167-ன் கீழ் குற்றமாகக் கருதப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் என RPF எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே பல ரயில்களில் இதுபோன்று கெட்டி பயன்படுத்தியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள RPF, “வெந்நீர் தேவைப்பட்டால் ரயில் பெட்டியில் உள்ள பான்ட்ரி காரில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது வீட்டிலிருந்து ஃபிளாஸ்கில் கொண்டு வாருங்கள். உங்கள் பாதுகாப்புக்காகவும் மற்ற பயணிகளின் உயிருக்காகவும் இந்த விதியை கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்” எனத் தெரிவித்துள்ளது. ரயிலில் பயணிக்கும் அனைவரும் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
