5 மாநில தேர்தல்.! நவம்பர் 7 முதல் தேர்தல்.. டிசம்பர் 3இல் ரிசல்ட்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

stateelection2023

டுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதற்கு முன்னதாக நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேர்தல் நடைபெறும். 20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 24,109 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக 64,532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், 5 மாநிலங்களில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 679 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 5 மாநில தேர்தல்களில் சுமார் 60 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) இருக்கின்றனர். 15.39 லட்சம் இளம் வாக்காளர்கள் தகுதித் தேதிகளில் திருத்தம் செய்யப்பட்டதால் தேர்தலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2900க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். 17,734 மாதிரி வாக்குச் சாவடிகள் இருக்கும், 621 வாக்குச் சாவடிகள் பொதுப்பணித்துறை ஊழியர்களால் நிர்வகிக்கப்படும், மேலும் 8,192 PS பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்