சித்த மருத்துவ துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியதால், ஆயுஷ்(AYUSH)அமைச்சகத்தின் பெயரிலிருந்து சித்த மருத்துவத்தை குறிப்பிடும் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி வீடியோ வெளியிட்டதற்காக சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
unknown nodeஇந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய சித்த மருத்துவர் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதி மன்றமானது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேத மருத்துவ துறைக்கு 3000 கோடியும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடியும் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கடுமையாக விமர்சிக்கும் வண்ணம் சென்னை உயர்நீதி நீதிபதிகள், ‘மத்திய அரசானது சித்த மருத்துவ துறையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன் எனவும், பிற துறைகளை விட சித்தமருத்துவ துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது துரதஷ்டவசமானது எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆயுஷ்(AYUSH)அமைச்சகத்தின் பெயரிலிருந்து S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என கண்டனம் தெரிவித்தனர். அதாவது,AYUSHஅமைச்சகத்தில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒவ்வொரு மருத்துவ துறை பெயர் குறிப்பிடப்படும். இதில் S எனும் வார்த்தை சித்த மருத்துவத்தை குறிப்பிடுவதாகும். இதனை குறிப்பிடும் வகையில் தான் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.