செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் 16 மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 16 மாணவர்கள் ஆங்கில வழியிலான பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். ஏழைக் குடும்பத்தை சார்ந்த இவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாமல் போயுள்ளது. எனவே அதே பள்ளியில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை 16 மாணவர்களுக்கு வாங்கி கொடுத்ததுடன், அதற்கான சிம்கார்டு மற்றும் ரீசார்ஜையும் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஆசிரியர் பைரவி, தான் இதை உதவியாக செய்யவில்லை என்றும், சேவையாகவே கருதுகிறேன் என்றும், இதுபோன்று மேலும் 25 மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்கான முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இனி முதல் தங்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். 16 மாணவர்களின் எதிர்காலத்திற்காக உதவி ஆசிரியருக்கே முன்னுதாரணமாக விளங்கும் பைரவி ஆசிரியருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
unknown node