தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்..இதோ..!

Breast feeding increase food -தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

breast feeding

Breast feeding increase food-தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உலகிலேயே கலப்படமில்லாத ஒரு உணவு பொருள் என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது .மேலும் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் மாட்டு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் பல பெண்களுக்கு பால் பற்றாக்குறை அல்லது பால் உற்பத்தி ஆவது இல்லை போன்ற நிலை உள்ளது. ஒரு சிலர் தாய்ப்பால் உற்பத்திக்கு மாத்திரைகளாக எடுத்துக் கொள்வார்கள்.

அதன் மூலம் குழந்தைகளுக்கு பல பக்க விளைவுகளும் வரும். அவ்வாறு இல்லாமல் இயற்கையாகவே உணவின் மூலம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்;

பூண்டு;

பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .ஐந்து பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து அந்த பாலை தினமும் இரவில் குடித்து வரவும் அல்லது பூண்டை சட்னியாகவும் செய்து எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு செய்யும்போது பால் உற்பத்தி அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை;

முருங்கைக் கீரையில் கால்சியம் மற்றும் அயன் சத்து அதிகம் உள்ளது இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பவர்களின் உடல் நலத்திற்கும் நல்லது ,இந்தக் கீரையை பூவுடன் பொறியலாக செய்தும் சாப்பிடலாம் அல்லது சூப்பாகவும் செய்து சாப்பிடலாம்.

வெந்தயம்;

பாலில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து பாயாசம் போல் செய்து குடித்து வரலாம் அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரிசியுடன் சேர்த்து வேகவைத்து வெந்தய கஞ்சியாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.

சீரகம்;

சீரகம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் குழந்தைக்கும் நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கிறது.

பழங்கள்;

பழங்களில் வாழைப்பழம் ,சாத்துக்குடி, ஆப்பிள், கொய்யா பப்பாளி போன்றவற்றை தினமும் குறிப்பிட்ட அளவு  எடுத்துக்கொள்ள வேண்டும்.

நட்ஸ் வகைகள்;

பாதாம் முந்திரி, பிஸ்தா பேரிச்சம்பழம் ஆகியவற்றையும் தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

காய்கறிகள்;

காய்கறிகளில் சுரக்காய், பூசணிக்காய், கோவக்காய், புடலங்காய், அவரக்காய் ,மரவள்ளி கிழங்கு ,சர்க்கரைவள்ளி கிழங்கு ,கேரட் ,நூல் கோல், பாகற்காய் போன்றவற்றையும்எடுத்துக் கொள்ளலாம்.

பயிறு வகைகள்;

பயிறு வகைகளில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது பால் உற்பத்திக்கும் உதவி செய்கிறது .குறிப்பாக பாசிப்பயிறு, கொள்ளு பயிறு, சுண்டல் போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகள்;

அசைவ உணவுகளில் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அவசியம். நாட்டுக்கோழி, மீன்களில் பால் சுறா ,சங்கரா, சில்வர் பிஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் கருவாடும் பால் உற்பத்தியை அதிகரிக்க கூடியது ஆனால் சிசேரியன் செய்த பெண்கள் ஆறு மாதத்திற்கு பிறகு மருத்துவரின் ஆலோசனை கேட்டு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்;

கடல் மீன்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் ,ஏனென்றால் கடல் மீன்களில் மெர்குரி அளவு அதிகமாக இருக்கும். மாட்டுப் பாலில் உள்ள புரதம் ஒரு சில குழந்தைகளுக்கு  மரபணுக்களின்  ரீதியாக  அலர்ஜி இருக்கும், இதனால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் மட்டும் பசும்பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மற்றபடி  அனைவரும் பசும்பால் அதிகமாகவே எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு1-2  கப் வரை தான் டீ காபி எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல் ஒயின், ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனவே தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்க இயற்கையான முறையில் உணவின் மூலமாகவே அதிகரிக்க முடியும்.