சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
மிளகு
சீரகம்
பூண்டு
தக்காளி
புளி
உப்பு
கொத்தமல்லி
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
ரசப் பொடி
சாம்பார் பொடி
மஞ்சள் பொடி
செய்முறை
முதலில் 50 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை எடுத்து நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் வரும் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து ரசத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்பை வேறு ஏதேனும் தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள். பின் மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்தாக பூண்டையும் தனியாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளியை போட்டு கையால் மசித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதனுடன் கொத்தமல்லி போட்டு வைத்துக் கொள்ளவும். பின்பு ரசம் தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பின்பு பிசைந்து வைத்துள்ள தக்காளி கரைசலை ஊற்ற வேண்டும்.
பின் இதனுடன் சாம்பார் பொடி, ரசப்பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பின்னதாக தக்காளியின் பச்சை வாசனை நீங்கியதும் எடுத்து வைத்துள்ள புளி கரைசலை இதனுடன் சேர்த்து அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம் தயார்.