#Breaking:"ஒரு மாதத்திற்குள் இதனை அகற்ற வேண்டும்...விளம்பரப்படுத்துங்கள்" – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

The Chennai High Court has directed the DGP to remove the misused national flag, national and state symbols, stamps in month.

தமிழகத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய,மாநில சின்னங்கள்,முத்திரைகள்,ஸ்டிக்கர்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை,ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக,காவல்துறை எடுத்த நடவடிக்கையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி,சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில்,தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவாகவில்லை எனவும்,மாறாக,தவறான வண்ணங்களில் விளக்குகளை பயன்படுத்தியதாக 4,456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து,இது தொடர்பான வழக்கு ஜனவரி 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில்,குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும்,தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு வழக்கு கூடவா பதிவானதாக காவல்துறை அறிக்கையில் இல்லை? என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து,கிரிமினல்களும் தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தி நடவடிக்கைகளிலிருந்து தப்புகின்றனர் எனவும் அதே சமயம்,நாட்டில் அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்களா? என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும்,இது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் விசாரணை நாளில் தெரிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில்,தமிழகத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய,மாநில சின்னங்கள்,முத்திரைகள்,ஸ்டிக்கர்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை, ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,உத்தரவை பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்,விதிமீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக,இது தொடர்பான உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜனவரி 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.