சென்னை :பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
சரோஜா தேவியின் மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சரோஜாதேவி மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”என்னைப் பார்க்கும் இடமெல்லாம் – என் எந்த வயதிலும் – கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர்.
மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
unknown node