திரை உலகம் வாழ விரும்பும் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் – லட்சுமி ராமகிருஷ்ணன்!

Actress and social activist Lakshmi Ramakrishnan has said that only 50% admission can be given in the theater instead of 100% admission.

தியேட்டரில் 100% அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எனவே 50% அனுமதி மட்டுமே வழங்கலாம் என நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரையிலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருவது போல திரை உலகினர்களுக்காகவும் சில தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் வருகின்ற பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியிடப்பட உள்ள நிலையில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது தமிழக அரசு சார்பில் 100 சதவீத அனுமதியுடன் தியேட்டர்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு திரையுலகினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக இயக்குனரும், நடிகையும், சமூக ஆர்வலரும் ஆகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரை உலகத்தினால் டாக்டர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை எனவும், போக்குவரத்து வழக்கம் போல இயங்குகிறது ஆனால் மக்கள் கவலை இன்றி தான் வாழ்கிறார்கள். இருந்தாலும் மக்களின் உடல் நலம் மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ள அவர், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டுமே வழங்கலாம்.

அப்படி திரை உலகம் வாழ வேண்டும் என விரும்பும் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ளட்டும். இதன்மூலம் தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதையும் குறைக்கலாம், அந்த வகையில் தொழிலையும் நடத்த முடியும். மேலும் தினசரி ஊதியம் பெறக்கூடியவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் கொடுக்க முடியும். இவ்வாறு செய்வதால் 50% அனுமதியிலேயே  தேவையான வருவாயையும் பெற இயலும் என கூறியுள்ளார். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் கடினமான ஒரு நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அது போல வேறு பல தொழில்களும் உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வேறு மாற்று முறைகளை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.