ஜெய் பீம் படத்தை எந்த விருதுக்கும் சிபாரிசு செய்ய கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் நவம்பர் 2ஆம் தேதி வெளியானது. தற்போது வரை அதன் அனல் கொழுந்துவிட்டு எறிகிறது. தா.சே.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு அடையாளம் இருந்ததாக கூறி பாமக தரப்பும், வன்னியர் சங்க தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
பாமகவை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு சூர்யா தரப்பில் இருந்து பதில் அறிக்கையும் வெளியானது. மேலும், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்திலும், திரைபரபலன்கள் அறிக்கை மூலமும், அரசியல் தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வன்னியர் சங்க மாநில செயலாளர் அருள்மொழி என்பவர் தங்களது வழக்கறிஞர் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளும் வசனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்த திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது எனவே அந்த படத்தை எந்த விருதுக்கும் சிபாரிசு செய்ய கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.