சென்னை :நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு அமைதியாகிவிடும். இதுவரை பலமுறை அவருடைய திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி அதற்கு அவரே விளக்கம் கொடுத்து நாம் பார்த்திருக்கிறோம். அப்படி தான் தற்போது அவருடைய திருமணம் குறித்த ஒரு செய்தி வெளியாகிக் காட்டு தீ போலப் பரவிக் கொண்டு இருக்கிறது.
அதாவது, சினிமாவில் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த பிறகு தான் பல நடிகைகள் திருமணம் செய்து பார்த்திருப்போம். அப்படி தான் இந்த முறை நடிகை கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.ஏனென்றால், முன்பை விட கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
எனவே, இந்த சூழலில் திருமணம் செய்து கொண்டு தேடி வரும் முக்கியமான படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கலாம் என எண்ணத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கீர்த்தி சுரேஷ் நீண்ட காலமாகக் காதலித்து வரும் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாகவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டிலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வரலாகப் பரவியது. அப்போதே இவரைத் தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து இது என்னுடைய நண்பர் எனக் கீர்த்தி சுரேஷ் விளக்கமும் அளித்து இருந்தார் .
ஆனால், உண்மையிலே அவரை தான் கீர்த்தி சுரேஷ் கடந்த 15- வருடங்களாகக் காதலித்து வருகிறாராம். அப்போது வெளியே சொன்னால் சரியாக இருக்காது…திருமணம் நெருங்கும்போது இதனை அறிவித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம். இப்போது வரும் டிசம்பர் 11 அல்லது 12-ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடு கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியாகப் பரவும் தகவலா? என்பதனை கீர்த்தி சுரேஷே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
