67 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் திருட்டபட்டது அம்பலம்! புதிதாக சிக்கியுள்ள இண்டேன் நிறுவனம்!
“எங்கும் ஆதார், எதிலும் ஆதார்” என்கிற நோக்கில் தான் தற்போதைய நிலை இருந்து வருகிறது. ஆதார் தேவையற்றது என பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், பொருளியலாளர்களும் கூறிவருகின்றனர். இதன் பயன்பாட்டை விட இதன் திருட்டு தான் நம்மை அஞ்ச வைக்கிறது. நமது பெயர், முகவரி, மேலும் சில அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? என எண்ணி கொண்டிருப்போர் பலர்!
உண்மையில் இது மோசமான அபாயத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் தற்போது 67 லட்சம் இண்டேன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என ஒரு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கண்டறிந்துள்ளார். இனி இதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
PC:PageImp
ஆதார்!
தனி மனித அந்தரங்கத்தை பற்றிய பல முக்கிய தகவல்கள் ஆதாரில் உள்ளது. இதனை விற்று இதிலிருந்து பல கோடி கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். அதாவது, நமது ஆதாரை விற்பது என்பது நம்முடைய முழு விவரத்தையும் விற்பதற்கு சமமாகும். இதை “டேட்டா கமாடிபிகேஷன்” போன்ற செயல்முறையின் மூலமாக வியாபாரப்படுத்த இயலும். தற்போது இப்படிப்பட்ட ஒன்று தான் நடந்துள்ளது.
யார் இவர்?
பிரான்ஸ் நாட்டு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எல்லியாட் ஆல்டர்சன் என்பவர் இண்டேன் நிறுவனம் தனது வாடிகையாளர்களின் ஆதார் தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இவர் தான் ஆதார் ஆணையத்தின் சேவை எண் நமது மொபைலில் தானாகவே சேமிக்கப்பட்டதை வெட்டவெளிச்சமாக்கியவர். இது போன்ற பல இணைய வழி திருட்டுகளை கண்டறிந்து தெரியப்படுத்துவதே இவரது சமூக பணியாகவே செய்து வருகிறார்.
PC: தகவலுழவன்
இண்டேன் நிறுவனம்
எல்லியாட் அவர்கள் இண்டேன் நிறுவனத்தின் டீலர்களின் டேட்டாபேஸில் இதுவரை சோதனை செய்ததில் 58 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக உறுதி செய்துள்ளார். மேற்கொண்டு சோதனை செய்தால் இதன் எண்ணிக்கை 67 லட்சமாக இருக்க கூடும் என இவர் கூறுகிறார்.
அதற்குள் இண்டேன் நிறுவனம் இவரின் ஐ.பி முகவரியை முடக்கி விட்டதாக இவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதை பற்றிய கேள்விகளுக்கு இண்டேன் நிறுவனமோ, ஆதார் ஆணையமோ எந்தவித கருத்தும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.