அடடா..இந்தியாவில் 1 மாதத்தில் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

WhatsApp said that the accounts of about 22 lakh users in India were disabled last September.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 22 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாட்டிங் தளமான வாட்ஸ்அப்,இந்தியாவில் 2.2 மில்லியனுக்கும்(22 லட்சத்துக்கும்) அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.அதே சமயம் 560 புகார் அறிக்கைகள் பெறப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், வாட்ஸ்அப் தளத்தில் 2,209,000 இந்திய கணக்குகள் செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் ‘+91’ ஃபோன் எண் மூலம் அடையாளம் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: “வாட்ஸ்அப் முறைகேட்டை தடுப்பதில் முன்னணியில் உள்ளது.அதன்படி, எங்கள் பயனர்களை எங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க எண்டு டூ எண்டு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் சேவைகளில், நாங்கள் பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளோம்.இந்த செயல்முறைகள், எங்கள் தளத்தில் எங்கள் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

மேலும்,தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் 1 முதல் 30 வரையிலான 30 நாள் காலத்திற்கான நான்காவது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.இந்த பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை மற்றும் எங்கள் தளத்தில் முறைகேட்டை எதிர்த்து வாட்ஸ்அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன”,என்று கூறினார்.

வாட்ஸ்அப் தனது தளத்தில் முறைகேடுகளைத் தடுக்க தடை செய்யும் உலகளாவிய சராசரி கணக்குகளின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 8 மில்லியன் கணக்குகளாக உள்ளது.

வாட்ஸ்அப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, கணக்கு ஆதரவு (121), தடை மேல்முறையீடு (309), பிற ஆதரவு மற்றும் தயாரிப்பு ஆதரவு (தலா 49) மற்றும் பாதுகாப்பு (32) ஆகியவை என செப்டம்பர் மாதத்தில் 560 பயனர் புகார் அறிக்கைகளைப் பெற்றுள்ளது.அவ்வாறு,பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் 51 கணக்குகள் மீது ‘அக்கவுண்ட்ஸ் ஆக்சன்ட்’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்கவுண்ட்ஸ் ஆக்சன்ட் என்பது அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகளைக் குறிக்கிறது என்றும், நடவடிக்கை எடுப்பது என்பது புகாரின் விளைவாக ஒரு கணக்கைத் தடைசெய்வதையோ அல்லது முன்பு தடைசெய்யப்பட்ட கணக்கை மீட்டெடுப்பதையோ குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தன.அதன்படி,பெரிய டிஜிட்டல் தளங்கள் (5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டவை) ஒவ்வொரு மாதமும் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிடும் நபர்களின் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும். அதில்,பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.