ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்-டெல்லி உயர் நீதிமன்றம்...!

The Delhi High Court has advised Twitter to follow the Central government's new rules

மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

மேலும்,இந்த புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும்,அதுமட்டுமின்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள்,மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்தன.

ஆனால்,ட்விட்டர் நிறுவனம் இந்த புதிய விதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து,இதுதொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.அதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இதனையடுத்து,மத்திய அரசின் வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர்,ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கானது நீதிபதி ரேகா பள்ளி முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ட்விட்டர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால்,இதனை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர்,புகாரை பெறுவதற்கான அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமிக்கவில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,”மத்திய அரசின் விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும்.அவ்வாறு,செய்யவில்லை என்றால் தடை விதிக்கப்படும்”, என தெரிவித்தார்.மேலும்,இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.