#SAvsIND: போராடி தோற்றது இந்தியா – 3 போட்டிகள் கொண்ட தொடரை முற்றிலும் வென்ற தென்னாப்பிரிக்கா!

Default Image

இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றுது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்கள் எடுத்து. சிறப்பாக விளையாடிய குயின்டன் டி காக் 124 ரன்கள் அடித்தார். இவரைத்தொடர்ந்து, அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்களை எடுத்து அணிக்கு உதவினார். இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தளவில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை மற்றும் தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் கேஎல் ராகுல் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை தந்தார். இதன்பின், ஷிகர் தவான், விராட் கோலி ஜோடி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தங்களது அரை சத்தங்களை பூர்த்தி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து உடனே ஷிகர் தவான் 61, விராட் கோலி 65 ரன்கள் அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் வெளியேற, இலக்கை அடைய முடியுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. ஆனால், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், தீபக் சாஹர் 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து, விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 6 பந்துகளில் 6 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலில் இருந்தது. அப்போது, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களத்தில் இருந்தனர். 49.2 வது ஓவரில் டுவைன் பிரிட்டோரியஸ் பந்தில் யுஸ்வேந்திர சாஹல் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் தென்னாபிரிக்கா அணி 4ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா அணி முழுமையாக வென்று இந்தியா அணியை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.

தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சை பொறுத்தளவில், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும், டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்