டெல்லி :இந்தியாவின் இளம் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா, ICC T20I பேட்டிங் ரேங்கிங்ஸில் உலகின் நம்பர் ஒன்று பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். அமிர்த்சரில் ஒரு சிறிய வீட்டில், 4 வயது சிறுவனாக பேட்டை கையில் வைத்து கிரிக்கெட்டில் மூழ்கிய அவர், இப்போது 931 ரேட்டிங் பாயிண்ட்ஸுடன் உலகின் உச்சத்தில் நிற்கிறார். இது ஒரு கிரிக்கெட் கதை போன்ற பயணம் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசியா கப் 2025 மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் அவரது அதிரடி சதங்களும், 314 ரன்களும் (சராசரி 44.85) அவரை இந்தியாவின் மிக முக்கிய T20I வீரராக மாற்றியுள்ளன.அபிஷேகின் குழந்தைப் பருவ கதைகளைப் பகிர்ந்த இர்பான் பதான், அவரது வளர்ச்சியை உள்நாட்டு கிரிக்கெட், IPL, சர்வதேச அளவிலும் இணைத்து விளக்கினார். 13 வயதில் அமிர்த்சரில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுவன், தனது முதல் கிரிக்கெட் சம்பளமாக ரூ.2000 கொண்டு வந்தான்.
அந்த வயதில் யாராவது புது காலணிகள், பேட் அல்லது நண்பர்களுடன் கொண்டாட்டம் செய்திருப்பார்கள். ஆனால் அபிஷேக் அந்த பணத்தை நேராக அம்மாவிடம் கொடுத்தான். அவரது அம்மா, இந்த சிறுவனின் தந்தையிடம் சொல்லியிருப்பார் “உன் மகன் உலகில் பெரிய புகழ் பெறுவான்” என்று பதான் நினைவுகூர்ந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டில் ஆழ்ந்த அபிஷேக், 4 வயதில் முதல் பேட்டைப் பெற்றதும் வீட்டில் அமைதி இல்லை. அம்மா, அப்பா, சகோதரியிடம் தொடர்ந்து “எனக்கு பந்து போடு” என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.
அன்று முழுவதும் ப்ராக்டிஸ் செய்தான். வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அனைத்து பேட்டுகளையும் வைத்திருந்தான். இன்றும் உலகின் நம்பர் ஒன் T20I பேட்ஸ்மேனான அவர், வீட்டுக்கு வரும்போது அந்த பழைய பழக்கத்தைத் தொடர்கிறார். அனைத்து பேட்டுகளையும் கோயிலில் வைக்கிறார். சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது என்று இர்பான் பதான் உணர்ச்சியுடன் கூறினார்.
