“ஒவ்வொரு போட்டியும் முக்கியம் தான்”! டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா பேட்டி!

நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு முன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

Rohit Sharma

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான தீவிரப் பயிற்சியில் கடந்த சில நாட்களாக இந்திய அணி வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், ரசிகர்களும் இந்த டெஸ்ட் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஏனென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குகிறது. அது மட்டுமில்லாமல் இனி இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த நிலையில், நேற்று இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, எங்களுக்கு இனி வரும் எல்லா போட்டிகளும் முக்கியமானது என்றும் வங்கதேச தொடருக்கான இந்திய அணியின் தயார் நிலையைப் பற்றியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய போது கூறி இருந்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நடைபெற்று வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம் தான். வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் முக்கியமானது தான்.

இவை அனைத்தும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான ஒத்திகை கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் திறந்த நிலையிலே உள்ளது. இதனால், எல்லா அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விளையாட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

அடுத்த 2 மாதங்கள் நாங்கள் எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியம் இல்லை. தற்போது, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதில் தான் எங்களது முழு கவனம் உள்ளது. சிறந்த வீரர்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து அதிக அளவிலான போட்டிகள் இருப்பதால் அது சாத்தியமில்லை.

டெஸ்ட் போட்டிகள் மட்டுமில்லை, டெஸ்ட் தொடரின் நடுவில் டி20 போட்டிகளும் நடைபெறுகிறது. எனவே அதற்குத் ஏற்றவாறு பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதெற்கெனவே ஒரு திட்டம் வகுத்துள்ளோம்”, என்று ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்