சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஜெயக்குமார்

We will take legal action against Sasikala - Minister Jayakumar

சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

சசிகலா காரில் அதிமுக கொடி :

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தினகரன் கருத்து :

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.

அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இதுபோன்று ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப்போராட்டத்தை தொடர்வார்கள். மற்றோரு கட்சியை ஆரம்பித்ததே ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தான் அமமுகவை ஆரம்பித்துள்ளோம். இது அவர்களுக்கு புரியும், ஆனால் புரியாத மாதிரி நடிப்பார்கள். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கருத்து :

அந்த வகையில்  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில்,தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் இணைப்பது அது பற்றி தலைமை முடிவு செய்யும். அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு  தினகரன் மன்னிப்பு கடிதம் தர  வேண்டும்.பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார்.அதிமுக உறுப்பினரே அல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான்.மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறி வருகின்றனர்.தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன் பக்கம் உள்ளவர்களை தினகரன் ஏமாற்றி வருகிறார் என்று  கூறினார்.

கே.பி.முனுசாமியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல – ஜெயக்குமார் பேட்டி :

இந்நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அதிமுகவில் அடைப்படை உறுப்பினர் உட்பட எந்த பதவியிலும் சசிகலா இல்லை.டிடிவியை இணைப்பது தொடர்பான முனுசாமியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல.அவரது தனிப்பட்ட கருத்து.சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.