#Breaking:"செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது" – உயர்நீதிமன்றம்..!

The High Court has ruled that the Corona vaccine cannot be ordered to be manufactured at the HLL Biotech plant in Chengalpattu

செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் ஆலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும்,மக்களைக் காக்கவும் ஒரே வழி தடுப்பூசிதான் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடும் இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.

மேலும்,இந்தியாவில் தடுப்பூசியை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரிப்பதால் மாநிலங்களுக்கு தடுப்பூசி உரிய அளவீட்டில் கிடைக்கவில்லை.

இதனால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி ஆலையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வெர்ணிக்கா மேரி என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இதனையடுத்து,இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கூறுகையில்,”தடுப்பூசி தயாரிப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,இடையூறு ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் அதில் தலையிட முடியாது.

மேலும்,தடுப்பூசி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும்.எனவே,செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது”,என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.