தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் -முதல்வர்..!

The Chief Minister said that natural calamities not only occur naturally but also human beings are responsible for it and the seasonal situation is not stable at present.

இயற்கைப் பேரிடர்கள் இயற்கையாக மட்டும் ஏற்படுவதில்லை இதற்கு மனிதர்களும் பொறுப்பேற்றாக வேண்டும், பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை என முதல்வர் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், பேரிடர்களின் தாக்கத்தின்போது ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொதுச் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைத்து, தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.

இயற்கைப் பேரிடர்கள் இயற்கையாக மட்டும் ஏற்படுவதில்லை இதற்கு மனிதர்களும் பொறுப்பேற்றாக வேண்டும். பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை.சென்னைப் பெருநகரத்தை வெள்ளநீர் சூழாமல் தவிர்க்க, பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்திட ஒரு நிரந்தரத் திட்டத்தை உருவாக்கிட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

மீனவர்களுக்குப் புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைச் செய்திகள் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் பேரிடர் எச்சரிக்கை தகவல் திட்டம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். ஒரு அரசாங்கத்தின் முதலாவது பணி மக்களைக் காப்பதுதான் அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுப்பது தான் என்று தெரிவித்தார்.