டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம்...!

Singapore government condemns Delhi Chief Minister Arvind Kejriwal ...!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்று கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால்,சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமான விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட  கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும் கூறுகிறார்கள். எனவே மத்திய அரசு சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்துவதில்,குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்”, என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து,சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது,”சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கையில் காணப்படும் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை.சிங்கப்பூரில்,சமீப காலங்களில் குழந்தைகள் உட்பட பெரும்பாலனவர்களிடம் கண்டறியப்படும் B.1.617.2 வகை கொரோனாவானது,இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஆகும்”, என தெரிவித்துள்ளது.