குஜராத் மாநிலத்திற்கு ‘டவ்-தே’ புயல் நிவாரணமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து, பலத்த காற்று வீசியதால் 16,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. குஜராத்தில் 5,951 கிராமங்களில் இருந்து மின் தடை ஏற்பட்டது.
இதனையடுத்து,’டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மோடி ஆய்வு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தில் டவ்-தே புயல் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் பிரதமர் மோடியுடன் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து,ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில்,குஜராத் மாநிலத்திற்கு டவ்-தே புயல் நிவாரணமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும்,புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும்,காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
unknown node