ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என கமல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார்.
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவை பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என தெரிவித்துள்ளார்.
unknown node