பொள்ளாச்சி கொடூரம் ! அதிமுகவினர் உட்பட ஒரு குற்றவாளி கூட தப்பக்கூடாது- மு.க.ஸ்டாலின்

Stalin has said that any culprit responsible for the Pollachi sexual violence, should be punished immediately without escaping.

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உள்ளிட்ட ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடாமல் உடனே தண்டிக்கப்படவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அ.தி.மு.கவினர் இருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், மகளிர் அமைப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வந்தனர். அவர்களைக் கைது செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது அ.தி.மு.க அரசு. கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதோ பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு என நினைத்த நிலையில், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சி.பி.ஐ. இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் பின்னணியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவர்கள். தொடர்ச்சியான புலன் விசாரணையின் அடிப்படையில், மூன்றாவதாகக் கைதாகியுள்ள அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர். அ.தி.மு.கவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர். தோண்டத் தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் ! கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம் அதிரடியாக நீக்கம்

சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன். பொல்லாத அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

unknown node