எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியா...? ஓ.பன்னீர்செல்வமா....? மீண்டும் கூடுகிறது அதிமுக கூட்டம்...!

The meeting is scheduled to be held at the AIADMK headquarters this morning.

இன்று காலை அதிமுக தலைமையகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. இதனை அடுத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள், மே-7ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து, அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி-க்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தை தொடர்ந்து, கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று முடிவு செய்யப்படாமலே கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு அதிமுக தலைமை தரப்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு கடிதம் எழுதப்பட்டது. இவர்கள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இன்று காலை அதிமுக தலைமையகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்வு செய்யப்படுவர்.