ஒமைக்ரான் வைரஸ்:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

Omicron Virus: Chief Secretary V.Iraianbu Consultation With All District Collectors!

சென்னை:ஒமைக்ரான் வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உலகையே அச்சுறுத்தும் புதிய வகை, உருமாறிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு தற்போது காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்டை நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்,தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.