சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது – நமது எம்.ஜி.ஆர்

No horn can stop Sasikala ADMK from recovering

சீண்டுவோர் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா என்று நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

அண்மையில்  டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% உறுதியாக உள்ளோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை .சசிகலாவுடன் இருந்தவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டார்கள் என்று கூறினார்.இதனிடையே 2017 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இதற்கு இடையில் சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர்.இதனால் நெல்லை மற்றும் திருச்சியை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுக தலைமை நீக்கி உள்ளது.

இந்நிலையில் அமமுகவின் நாளேடான நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில் ,சீண்டுவோர் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா.பதவி வரும் வரை மண்டியிட்டு ,கை கட்டி ,சரணாகதி அடைந்து நின்றவர்கள் ,பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் துரோகிகளுக்கு  நாவடக்கம் செய்ய வேண்டும்.சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.