பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பும் முகுல் ராய்..!

Mukul Roy to quit BJP and return to Trinamool Congress

பாஜகவின் தேசிய துணை தலைவரான முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ ஆகிய இருவரும்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில்,மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து,கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கு வங்க எம்.பி.பதவியை முகுல் ராய் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து,பாஜகவில் இணைந்த முகுல் ராய்,அக்கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,கடந்த சில மாதங்களாக பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி,பாஜகவில் இணைந்தனர்.

இதற்கிடையில்,சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது பெரும் வெற்றிப்பெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.இதனால்,திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலரும் மீண்டும் அக்கட்சிக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.குறிப்பாக,முகுல் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில்,முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ ஆகிய இருவரும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

மேலும்,அவர்களை வரவேற்ற மம்தா பானர்ஜி,”மீண்டும் வீட்டிற்கே திரும்பி விட்டீர்கள்.மற்றவர்களை போல நீங்கள் ஒரு துரோகியாக இருக்கவில்லை. தேர்தலில் திரிணாமுல் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததைத் தவிர்த்து வேறு எதையும் தவறாகச் செய்யவில்லை”,என்று தெரிவித்தார். இந்த சம்பவம்,மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.