#Breaking:"இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது" – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Minister Ma Subramanian has said that there will be no mega vaccination camp this week as it is the Pongal festival.

சென்னை:பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்,பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு தொற்றின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும்,21,000 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்,பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது.அடுத்தவாரம் வழக்கம்போல் சனிக்கிழமையில் முகாம் நடைபெறும்.மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்.அதே சமயம்,தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்களாக உள்ளனர்.மேலும்,சிறார் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து. எனவே,கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,இன்று திறக்கப்படவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்து பேசிய அமைச்சர்,”தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011 பிப்ரவரியிலேயே திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால்,அதிமுகவால் தான் இத்திட்டப் பணிகள் தாமதமானது.மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திமுக அரசின் திட்டம்.இது குறித்து அதிமுக மார்தட்டி கொள்வதில் என்ன ஞாயம் இருக்க முடியும்”,என்றும் கூறியுள்ளார்.