மகாராஷ்டிரா: மழை விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

The death toll from a series of heavy rains and landslides in Maharashtra has risen to 164.

மகாராஷ்டிராவில் பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்கு மழையால் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக இதுவரை வெவ்வேறு இடங்களில் 164 பேர் உயிரிழந்த நிலையில், 56 பேர் காயமடைந்தனர், 100 பேர் இன்னும் காணவில்லை என்று அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் குழு தொடர்ந்து வீடு இடிபாடுகளில் சிக்கியவர்களை, நிலச்சரிவில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரம் காணாமல் போன நபர்களையும் தேடி வருகிறது.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி வெள்ளத்தால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப்படையினரால் இதுவரை 1.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.