கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் – மத்திய மந்திரி!

Kejriwal failed to deliver oxygen to the people. The Union Minister criticized him for talking about providing ration items to households.

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் கெஜ்ரிவால்.

இவர் வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்குவது குறித்து பேசுவதாக மத்திய மந்திரி விமர்சனம்.

தலைநகர் டெல்லியில் தேர்தல் நடந்த பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து உள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரேசன் பொருட்களை வீடு வீடாக வழங்கக்கூடிய திட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு தொடர்ந்து ஒப்புதல் அளிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை இணையவழியில் சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் அவர்கள் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்த கெஜ்ரிவால் வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்குவது பற்றி பேசுவதாக விமர்சித்துள்ளார்.

ரேஷன் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் டெல்லி இருப்பதாகவும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை 34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.