ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலி என எப்படி கூற முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை கோரிய இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரகள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் ஆஜராகி பேசிய வழக்கறிஞர், 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலி என எப்படி கூற முடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகி விட்டதாக இபிஎஸ் தரப்பு வைத்த வாதம் தவறானது.
அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை இல்லை. கட்சி விதி திருத்தம் அமலுக்கு வந்தபின் ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறைதான். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இறந்தபோது என்ன ஆனது என்பதை பதில் மனுவில் விளக்கவில்லை. தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.