வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்துறைக்கான அறிக்கை – முதல்வர் அறிவுறுத்தல்

For the first time in history, a separate financial statement for the agriculture sector - Chief Minister stalin instruction

சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும்,பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும்,விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என்று அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

வரலாற்றில் முதன்முறை:

“திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாகத் தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிறந்த திட்டங்கள்:

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

புதிய மறுமலர்ச்சி:

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினைப் பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினைத் தயாரிக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்”,என்று தெரிவித்துள்ளது.

unknown node