வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக துறை நடவடிக்கை எடுப்பதோடு தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது குறித்து வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம். இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வியை தயாரித்த பேராசிரியர்,அதனை பல்கலைக்கழகம் சார்பில் பரிசீலனை செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க அனுமதித்தவர்கள் மீது துறை நடவடிக்கை எடுப்பதோடு தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node