#Breaking:தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு;கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஆலோசனை!

#Breaking: Night curfew in Tamil Nadu; restrictions - Chief Minister's advice!

சென்னை:கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இந்த நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மீண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720 ஆக அதிகரித்துள்ளது. இதனால்,சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாமா?,மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தலாமா? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனைக்கு  பிறகு முக்கிய அறிவிப்புகள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.