தமிழ்நாட்டிற்கு வெள்ள நிதி வழங்கிட வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம்.
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாஅவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையுத் சுட்டிக் காட்டியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும். பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
unknown node