#Breaking:'அக்னிபத்' திட்டம்;பற்றி எரியும் பெட்டிகள் – நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிப்பு!

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.பின்னர்,பணி நிறைவு பெறும் வயது 21-லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது.இதில்,4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பாஜக ஆளும் உத்தரபிரதேசம்,பீகார், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி, இத்திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி சாலைகளில் டயர்களை கொளுத்தியும்,பேருந்துகளை அடித்து நொறுக்கியும்,ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,தெலுங்கானாவிலும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்த போராட்டக்காரர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தை சேதப்படுத்தி,ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்நிலையில்,அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும்,35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,13 ரயில் சேவைகள் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.