ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் பரோலில் விடுவிப்பு- விசிக தலைவர் வலியுறுத்தல்..!

7 convicts in former PM Rajiv Gandhi murder case released on parole - MP Thol. Thirumavalavan insists

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக தண்டனை பெற்று வரும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,”பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு,இந்தப் பிரச்சினையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம்.

ஆனால், அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசு’முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர்,சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார்.

இந்நிலையில்,தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே, 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்தத் தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.

எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”,என்று வலியுறுத்தியிருந்தார்.

unknown nodeunknown node