இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு...!

A new type of virus has been detected in Sri Lanka.

இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் நீலிகா மாலவிஜே  அவர்கள் கூறுகையில், ‘இலங்கையில் வீரியமிக்க புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இந்த வைரஸ் அதி வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும், காற்றில் சுமார் ஒரு மணி நேரம் வரை உயிரோடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வைரஸால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் மூன்றாவது அலையாக மாற வாய்ப்புள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து இலங்கை சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் அசிலாக் குணவர்தன கூறுகையில், ‘கொரோனா வைரஸ் முதல் அலையின் போது அறிகுறிகள் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதித்த அவர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும்,  கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் போதுமான அளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் 99 ஆயிரத்து 667 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 638 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்றும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.