உதகையில் சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகை அருகே உள்ள புதுமந்து எனும் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய சந்திரனின் மனைவி கீதா. இவர்களுக்கு 16 வயதில் ரக்ஷிதா என்ற மகளும், 11 வயதில் விஷ்வா என்னும் மகனும் உள்ளனர். இந்நிலையில் சந்திரன் கீதா இருவரும் ஒப்பந்த முறையில் காய்கறி தோட்டத்தை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரன் மற்றும் கீதா ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்களது பிள்ளைகள் இருவரும் தரையில் உயிரிழந்த நிலையில் சடலமாகவும் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் புதுமந்து காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.