ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர்! காவல்துறை கொடுத்த விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை : வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

armstrong bsp

ஆம்ஸ்ட்ராங் கொலை :வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவேங்கடம்,  உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று காலை திருவேங்கடத்தை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்ற  போது தப்பி ஓட முயன்று திருவேங்கடம் மறைத்து வைத்து இருந்த பொருட்களை வைத்து காவல்துறையினரை தக்க முயன்றதாகவும் இதன் காரணமாக,  தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து, இது குறித்து காவல்துறை தரப்பில் இருந்து  விளக்கம் தெரிவித்து வெளியீடபட்டு இருக்கும் அறிக்கையில், ” கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.