இன்று உண்ணாவிரதப் போராட்டம் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

Default Image

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து,சில மணி நேரங்களே ஆன நிலையில்,மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு  தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து,55 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இதனையடுத்து,சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் முன்னதாக அறிவித்துள்ளது.

அவ்வாறு,டிச.31 ஆம் தேதிக்குள் விடுவிக்காத பட்சத்தில் ஜனவரி 1 ஆம் தேதி ராமேஸ்வரம் – சென்னை விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை தங்கச்சிமடம் பகுதியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த போராட்டத்தில் மண்டபம் பகுதி மீனவர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மீண்டும் இலங்கை கடற்படையானது நேற்று முன்தினம் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்து சென்றது. இதன்காரணமாக,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில்,இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், 75 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்