பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்கள் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வசம் அளிக்கலாம் என 9498142494 என்ற மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் என்றால் அது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தான்.
கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்ததை தொடர்ந்து, கொலையாளி சதீஷை தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையின் கீழ் கைது செய்தனர். தற்போது சதீஷ் நீதிமன்ற காவலில் இருக்கிறார். சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, குற்றம் நடைபெற்ற அன்று ரயில் நிலையத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வழக்கு குறித்த முக்கிய விவரங்களை சிபிசிஐடி போலீசார் வசம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் –9498142494என்ற மொபைல் நம்பரையும் கொடுத்துள்ளார். இந்த மொபைல் நம்பருக்கு போன் செய்தும் தங்கள் வாக்குமூல விவரத்தை கூறலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.