சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும். அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.